Pages

Monday, March 21, 2011

கோளறு பதிகம்.

கோளறு பதிகம்..

திருஞானசம்பந்தர், தமிழ்நாட்டில், சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதலாக வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், பிராமணக் குடும்பத்திற் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் இசைஞானியார்.
திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல சிவத்தலங்களுக்கும் ஒன்றாகவே சென்று பாடல்களால் இறைவனை அர்ச்சித்துள்ளனர். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் திருமறைக்காடு (வேதாரண்யம்) என்கிற திருத்தலத்தில் இருந்தபோது மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னன் சமணமதத்தில் பற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய மனைவி மங்கையர்க்கரசியோ சைவ மதத்தில் பற்றுக் கொண்டிருந்தார். பாண்டிய நாட்டில் சமண மதம் ஓங்குவதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அங்கே சைவம் தழைக்க உதவ வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசியாரின் அழைப்பினை மதுரை ஏவலர்கள் திருமறைக்காடு வந்து திருஞான சம்பந்தரிடம் தெரிவித்தனர். திருஞான சம்பந்தர் மதுரை செல்ல உடன்பட்டு திருநாவுக்கரசரிடம் விடைபெறச் சென்றார். திருநாவுக்கரசர், அந்தக் கணத்தில் கோள்களின் அமைப்பும் அன்றைய நாளும் தீமை பயக்கும் அறிகுறிகள் காட்டுவதாகக் கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார்.

“சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். அந்தப் பாடல்களின் தொகுப்பான பதிகமே (பத்து பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர்) கோளறு பதிகம் எனப் பெயர் பெற்றது. (பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள்)

கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது சைவ சமயத்தாருக்கு ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. இன்றும் ஏதாவது முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை முழுதாகவோ முதல் பாடலை மட்டுமோ அவசரமாக முணுமுணுத்து விட்டுச் செல்லும் வழக்கம் பலரிடம் உண்டு. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கோளறு பதிகத்தினை பாராயணம் செய்து வரவும்। (விக்கிப்பீடியாவில் இருந்து)

a 10-stanza poem from Thevaram by Thirugnanasambar to ward of
all planetary afflictions. Recite on all Tuesdays and fridays.

"வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார‌ வர்க்கு மிகவே."

"என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு ப‌தினெட்டொ டாறும்
உடனாய நாள்க ள‌வைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"உருவளர் பவளமேனி ஒளிநீ ற‌ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருக‌லர் கொன்றைதிங்கள் முடிமேல‌ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய‌தூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே. "

"மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து
மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"நஞ்ச‌ணி கண்டனெந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூதம‌வையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோள‌ரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள‌ரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான‌ பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த வத‌னால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற‌னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"கொத்தல‌ர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ ட‌மணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார‌வர்க்கு மிகவே."

"தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே."

கோளறு பதிகம் - வேய்உறு தோளிபங்கன் YouTube

1 comment:

  1. citizen titanium dive watch - ITIAN TIGERIAN
    The professional titanium curling wand TIGERIAN, an alloy made from manganese, has titanium bmx frame been successfully 2019 ford edge titanium for sale used to make high-quality watches, as well ford escape titanium as other watches. samsung watch 3 titanium

    ReplyDelete